Friday, August 05, 2011

athithi devo bhava

நான் கண் விழிக்கும் போது மனதில் குதூகலம் இருந்தது. கண் எதிரே நித்தமும் கண் விழிக்கும், கண் மூடும் வெள்ளைச்சுவர் .
எனக்கு இன்று விடுதலை கிடைக்கும் என தோன்றுகிறது. ஒரு வித உள்ளுணர்வு. விடுதலை பற்றிய சிந்தனை கொடுத்த குதூகலமா? தெரியாது.

எனக்கு எதுவும் தெரியாது. தெரிய தேவையும் இல்லை. திமிராக பேசுகிறேன் என்கிறீர்களா? அப்படிதான். நான் இப்படித்தான். உங்கள் ஆமோதிப்போ, எதிர்ப்போ எனக்கு தேவை இல்லை.

ஆ! நான் இப்போது யாரிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன்? உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்? சாரி! எனக்கு காது செரியாக கேட்காது.. வயசாவுதுல்ல?

வயசு எவ்வளவுன்னு கேக்கறீங்களா? அதெல்லாம் கணக்கு வச்சுக்கிறதில்லை . ரொம்ப வயசாச்சு. அவ்ளோதான். சின்ன வயசு ஞாபகம் அப்போ அப்போ வந்து போகும்.. ஒரு கனவு போல .. கனவுல ..

அந்த ஒரு ராத்திரி.. ச்சே! நான் அதை கனவுன்னு தான் நம்பறேன் .. அது கனவு தானே?

நான் யாருன்னு கேக்கறீங்களா? சாரி! எனக்கு அதுவும் மறந்து போச்சு. ஞாபகம் வரும்போது சொல்றேன்.

எவ்ளோ நாளா இப்டி இருக்கேன்? தெரியலையே! . எனக்கென்னவோ பல யுகம் இப்டியே போனமாதிரி தான் இருக்கு ..போதும் போதும்னு அப்போப்போ தோணும்.. மனசோட வேகம் குறைந்து போய், மனசே இல்லாத ஒரு வெட்ட வெளி சூனியதுல்ல இருக்கேன். நேரம் காலம் எதுவும் இல்லாத ஒரு வெட்ட வெளி.

சாரி. உங்களுக்கு நேரம் ஆவுதுல்ல? சீக்கிரம் சொல்லி முடிச்சிடறேன். விடுதலைன்னு தெரிஞ்சதும் ஒரு பர பரப்பு வந்திருச்சு. யா ஹூ!

எங்கே விட்டோம்? என்ன பேசிட்டு இருந்தோம்? சரி விடு. இதற்கு மேல் என்னிடம் எடுக்க எதுவும் இல்லை. இந்த திருநாடும் காலமும் என்னிடம் இருந்த அத்தனையும் எடுத்து அழித்துவிட்டன,. என் அடையாளம் உட்பட.

இனிமேல் அழிக்க எதுவும் இல்லை. என்னிடம் ஒன்னும் இல்லைன்னு தெரியும். ஆனாலும் விட மாட்டாங்களாம்.

ஆனா நான் தப்பிக்கிறேன். ஏன்னா, கால கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஒரு வழிப்பாதையாக.. எனக்கு இப்போது தான் காலனின் வழியாக தெரிஞ்சுது.

இந்த வேஷம் கலைத்து வேறு ஒன்று கட்ட வேளை வந்தது.

எனக்கு கிடைத்த அத்தனைக்கும் நன்றி. நேரம் ஆச்சு. வரட்டா?

சாரி. நான் யாரென்று சொல்லலைல?

என்னை "முஹம்மது அஜ்மல் அமீர் கசாப்" என்று அழைத்தார்கள்.