Monday, January 13, 2014

லௌகீகனின் காலை

இரவின் மெல்லிய குளிர்
மிச்சம் இருக்கும் அதிகாலை.

ஊர் விழிக்காத அமைதியில்
டிவிட்டிர் டிவிட்டிர் என்று
எங்கோ ஒரு பெயரில்லாத பறவை.

நேரம் நின்று போய்
வார்த்தையில் சிக்காத
பரவசம் தரும் சூரிய உதயம்.

மேகங்கள் அற்ற விரிவானம்
வெண்வாலால் இரண்டாக்கும்
உயரே ஒரு விமானம்.

இவ்வாறாய் கவிதை
படைக்க ஆரம்பித்த தினம்,
மற்றும் ஒரு லௌகீகனின்
தினமாய்
விரைந்து கடந்திருக்கும்.

ஒவ்வொரு நொடியாய்
உயிர் மெழுகுவர்த்தி
உருகி
உடல் கண்காணாமல்
கரைந்து  போகும்
நிஜம் உணர்ந்த 
விதிர்விதிர்ப்பில்,

லௌகீகனின்  மரணமும்
விதி வெல்ல விழையும் போராளியின்
பிறப்பும் ஒரு சேர நிகழ்ந்தது.